அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி, தமிழகம் முழுவதும் ‘மக்களை காப்போம். தமிழகத்தை மீட்போம்’ என்ற முழக்கத்துடன் பிரச்சாரப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக வரும் 23 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை திருச்சியில் பிரச்சாரப்பயணம் மேற்கொள்கிறார். அதனைத் தொடர்ந்து திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் வரும் 25 ஆம் தேதி நடைபெறவுள்ள பிரச்சாரப் பயணத்திற்கான விளம்பரம் மற்றும் வரவேற்பு பிளக்ஸ் பேனர்களை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ராஜகோபுரம் முன்பாக அதிமுகவினர் வைத்திருந்தனர்.அதிமுகவினர் வைத்த பேனர்களை ஸ்ரீரங்கம் காவல் துறையினர் அகற்றிவிட்டனர்.
இந்நிலையில் பேனர்களை அகற்றிய காவல் துறையினரையும், மாநகராட்சி அதிகாரிகளையும், தமிழக அரசையும் கண்டித்து, திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தை திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி தலைமையில் அமைச்சர் அமைப்புச் செயலாளர் வளர்மதி, அமைப்பு செயலாளர் முன்னாள் கொறடா மனோகரன், மாநில சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் புல்லட் ஜான் ,மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர் ஜெயம் ஸ்ரீதர், மாவட்ட அவைத் தலைவர் சமயபுரம் ராமு, மீனவரணி கண்ணதாசன்,மாணவரணி அறிவழகன், எம்ஜிஆர் மன்றம் அறிவழகன் விஜய்,ஒன்றிய செயலாளர்கள் முத்து கருப்பன்,கோப்பு நடராஜ், ஜெயக்குமார், பகுதிச் செயலாளர்கள் டைமன் திருப்பதி சுந்தர்ராஜன், ஐ.டி. பிரிவு திருப்புகழ் , இளைஞர் அணி தேவா புங்கனூர் கார்த்திக் ,நிர்வாகிகள் வி.என் ஆர்.செல்வம்,ரவிசங்கர், உள்ளிட்ட நிர்வாகிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அதைத் தொடர்ந்து திருச்சி மாநகர ஸ்ரீரங்கம் சரக காவல் உதவி ஆணையர் மற்றும் ஸ்ரீரங்கம் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோர், அதிமுகவினரை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காவல்துறையினர் செயல்படுவதாக எடுத்துக் கூறினார்கள். அதனை ஏற்றுக் கொண்ட அதிமுகவினர் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்பட்டு நடப்பதாக கூறி போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்தப் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.