தமிழக முதல்வர் 2021 ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் 313 வது சரத்தில் குறிப்பிட்டவாறு சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம், பணிக்கொடை, காலி பணியிடங்கள் நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகள் இன்று வரை நிறைவேற்றப்படாத காரணத்தால் அதனை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்திலும், தொடர் மறியல் போராட்டத்திலும், காத்திருப்பு போராட்டத்திலும் சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர், சமையல் உதவியாளர்கள் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கூடிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தங்களது போராட்டத்தை துவக்கினர் இன்று முதல் 3 நாட்களுக்கு தொடர் மறியல் போராட்டத்திலும் அதன்பின் ஜனவரி 24 , 25 ஆகிய தேதிகளில் மாவட்ட அளவில் காத்திருப்பு போராட்டமும் செய்யப் போவதாக அச்சங்கத்தினர் தெரிவித்தனர். இதனை அடுத்து ஆட்சியர் அலுவலக சாலையில் மறியலில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டு திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
