திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக்கூட்டம் மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில், ஆணையர் மதுபாலன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை ஆணையர் பாலு, நகரப் பொறியாளர் சிவபாதம், மண்டலக்குழுத் தலைவர்கள் மதிவாணன், துர்காதேவி, விஜயலட்சுமி கண்ணன், ஜெய நிர்மலா,மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் ,நகர் நல அலுவலர், செயற்பொறியாளர்கள், மாநகராட்சி உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

இக்கூட்டத்தில் திருச்சி மாநகராட்சி அதிமுக தலைவர் அம்பிகாபதி பேசுகையில்:- திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலைய பணிகளுக்கு மாநகராட்சி பொது நிதி முழுவதையும் முன்னிட்டு செலவழித்து விட்டனர்.இதனால் வார்டுகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வளர்ச்சி திட்ட பணிகள் எதுவும் நடைபெறவில்லை.கேட்டால் அதை செய்துள்ளோம், இதை செய்துள்ளோம் என்று கூறுகிறார்கள்.பஞ்சப்பூர் பஸ் நிலையம் இதுவரை நடந்த பணிகள் குறித்து முழு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். என கூறினார் அப்போது திமுக நிதி குழு தலைவர் முத்துச்செல்வம் பேசுகையில்:- திருச்சி மாநகராட்சியில் எண்ணற்ற வளர்ச்சி திட்ட பணிகள் நடந்துள்ளன.திருவெறும்பூர் பஸ் நிலையம்,திருவரங்கம் பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது என்றார். அப்போது அதிமுக கவுன்சிலர்களுக்கும், திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதை அடுத்து, அதிமுக கவுன்சிலர்கள் அம்பிகாபதி அரவிந்தன், அனுசியா ஆகியோர் வெளிநடப்பு செய்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மாநகராட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மொத்தம் 133 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
