திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளரும், தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருவெறும்பூர் பகுதிக்குட்பட்ட 41-வது வார்டு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நேதாஜி நகர், செல்வபுரம், காந்தி நகர், புத்துக்கோவில், காமராஜர் நகர், சுப்பிரமணியபுரம், கக்கன் காலனி, அம்பேத்கர் நகர், டி.நகர், முல்லைவாசல் தெரு, இந்திரா நகர் மற்றும் நொச்சியவயல் புதூர் ஆகிய பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று அவர் வாக்கு சேகரித்தார்.

பொதுமக்களிடையே உரையாற்றிய அமைச்சர் பேசுகையில்:- வளர்ச்சிப் பணிகள்: “கடந்த 2021 முதல் 2026 வரை இந்த 41-வது வார்டில் மட்டும் சாலை வசதி, குடிநீர் திட்டங்கள், குளம் சீரமைத்தல் மற்றும் மழைநீர் வடிகாலுடன் கூடிய சிறுபாலம் அமைத்தல் என சுமார் 12 கோடியே 98 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.” “தமிழகத்தில் இன்று மகளிர் விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மற்றும் 20 லட்சம் குழந்தைகள் பசியாற காலை உணவுத் திட்டம் போன்றவை செயல்படுத்தப்படுகிறது என்றால், அதற்கு நீங்கள் அளித்த ஒவ்வொரு வாக்கும் தான் காரணம். உங்கள் வாக்கினால் தான் தமிழக முதல்வர் என்னை பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக நியமித்து, துறையில் பல்வேறு முன்னேற்றங்களைச் செய்ய வாய்ப்பளித்தார்.”

“வாக்குப்பதிவு எந்திரத்தில் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகிய நான் முதலிடத்தில் இருப்பது முக்கியமல்ல; மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது, அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன் என்ற செய்தி தான் வர வேண்டும். அது உங்கள் கைகளில் தான் உள்ளது. எனவே, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.” இந்நிகழ்வில் பகுதி கழகச் செயலாளர் சிவக்குமார், வட்டக் கழகச் செயலாளர் வி.பி. கருணாகரன், அப்பு (எ) கருணாநிதி, மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் கோவிந்தராஜன், பகுதி இளைஞரணி அமைப்பாளர் ஜோதி பாசு மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
