தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக , இந்து சமய அறநிலையத் துறை சார்பில் திருச்செந்தூர்- அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் , சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் , திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார்.

இறையருள் பெற திருக்கோயில்களுக்கு வருகைதரும் பக்தர்களுக்கு உணவளிப்பதே அன்னதானத் திட்டமாகும் . தற்போது இத்திட்டத்தில் திருக்கோயில்களில் மதியவேளை அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது . முந்தைய காலகட்டங்களிலும் திருக்கோயில்கள் மூலம் ஏழைகளுக்கு உணவளிக்கும் நடைமுறை இருந்து வந்துள்ளது .

இதனைப் பின்பற்றி கொரோனா பெருந்தொற்று காலத்தில் , ஏழை எளிய மக்களின் பசியினை போக்கும் விதமாக திருக்கோயில்கள் சார்பாக 44 இலட்சம் பேருக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன . 754 திருக்கோயில்களில் தயாரிக்கப்படும் பிரசாதம் மற்றும் அன்னதானம் தரத்துடனும் , சுகாதாரமான முறையிலும் தயாரிக்கப்படுவதை உறுதி செய்திட , இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையத்தால் வழங்கப்படும் தரச்சான்று அனைத்து முதுநிலை திருக்கோயில்களிலும் பெறப்பட்டுள்ளது .

தற்போது , பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் , திருவரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் ஆகிய இரண்டு திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது . இத்திட்டமானது விரிவுபடுத்தப்பட்டு , திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் 4.9.2021 அன்று இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் , சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் , திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆகிய மூன்று திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது .

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்று துவக்கி வைக்கப்பட்ட அன்னதானத் திட்டத்தின் வாயிலாக இம்மூன்று திருக்கோயில்களிலும் நாள்தோறும் சுமார் 7,500 பக்தர்கள் பயனடைவார்கள் . இந்த அன்னதானத் திட்டத்தின் கீழ் பக்தர்களுக்கு காலை 8 மணி முதல் இரவு 10 மணிவரை உணவு பரிமாறப்படும் .

இந்நிகழ்ச்சியில் மீன்வளம் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு , பால்வளத் துறை அமைச்சர் . நாசர் , சட்டமன்ற உறுப்பினர்கள் , தலைமைச் செயலாளர் முனைவர் இறையன்பு சுற்றுலா , பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் சந்தர மோகன் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர். குமரகுருபரன். , திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *