இந்திய பிரதமர் மோடி அவர்களால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தோன்றிய உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்வு அளிக்கும் யோகக் கலையை உலகம் முழுவதும் பிரபலப் படுத்தி, அதன் மூலம் உலக நாடுகள் ஒருமித்த ஆதரவுடன் 2015 ஆம் ஆண்டு முதல் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா நோய்த்தொற்றின் அச்சுறுத்தல் நிலவி வரும் நிலையில், 7-வது சர்வதேச யோகா தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இன்றைய நாளில் பல்வேறு யோகாசன நிகழ்வுகள் நடைபெறும் இக்காலகட்டத்தில் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் பொது இடங்களில் யோகாசன நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் மூலமாகவே பல இடங்களில் நடைபெற்று வருகிறது.இதனிடையே இந்திய தொல்லியல் ஆராய்ச்சி துறையின் சார்பில் நாடு முழுவதும் 75 இடங்களில் உலக யோகாசன நாள் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் திருச்சி உள்ளிட்ட நான்கு இடங்களில் நடைபெறுகிறது. அந்த வகையில் திருச்சி மலைக்கோட்டை பல்லவ குகை வாசலில் சர்வதேச யோகா தின நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு, தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அருண்ராஜ் தலைமையில் யோகா ஆசிரியர் ராஜசேகரன் வழிகாட்டுதலில் இந்திய தொல்லியல் ஆராய்ச்சி துறை ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் என திரளானோர் சமூக இடைவெளியுடன் பங்கேற்று பல்வேறு ஆசனங்களை செய்தனர்.