தமிழகத்தில் மே 31-ம் தேதி தளர்வுகளற்ற ஊரடங்கை தொடர்ந்து மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அறிவித்தார். அதன்படி ஜுன் 7ஆம் தேதி காலை 6 மணி வரை ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவித்தார்.
வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள், விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தோட்டக்கலைத்துறை சார்பில், காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரை காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்படும் என வேளாண்துறை தெரிவித்துள்ளது.
தனியார் நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் போன்றவற்றில் பணிபுரிவோர்,வீட்டிலிருந்தே பணிபுரிய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். Swiggy, Zomato போன்ற நிறுவனங்கள் பார்சல் சேவையில் ஈடபட அனுமதி.
உணவகங்களில் காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் பங்க்குகள் வழக்கம் போல் இயங்கும். சரக்கு வாகனங்கள் செல்லவும், அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி. உரிய மருத்துவக் காரணங்கள் மற்றும் இறப்புகளுக்காக மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவுடன் அனுமதிக்கப்படும்.
மருத்துவக் காரணங்களுக்காக மாவட்டத்திற்குள் பயணிக்க இ-பதிவு தேவையில்லை. செய்தி மற்றும் ஊடக நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை தவிர வேறு எந்த செயல்பாட்டுக்கும் அனுமதி இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அத்தியாவசியத் தேவையின்றி வெளியே சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.