தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மாநிலம் முழுவதும் 12,895 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதே நேரம் ஓமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கையும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாட்டில் கடந்த 6-ந் தேதி முதல் தினமும் இரவு 10 மணியில் இருந்து காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மருத்துவத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவத்துறை செயலாளர், பொது சுகாதாரத்துறை இயக்குனர், மருத்துவக்கல்வி இயக்குனர் உள்ளிட்டோர் பங்கேற்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *