திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் நடைபெறும் குட்டிக் குடி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாகும். சோழ மன்னர்களின் குல தெய்வமாக வணங்கப்பட்டு தற்போது திருச்சி நகர காவல் தெய்வமாக விளங்கும் குழுமாயி அம்மன் கோவில் வருடாந்திர தேர் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்தத் திருவிழாவிற்காக திருச்சி உய்யகொண்டான் வாய்க்கால் கரையில் உள்ள கோவிலில் இருந்து பக்தர்கள் அம்மனை தேரில் வைத்து புத்தூர் மந்தைக்கு ஊர்வலமாக அழைத்து வந்தனர். ஓலைப்பிடாரி அலங்காரத்தில் இருந்த அம்மன் தேரை, புத்தூர் அக்ரஹாரம், வடக்கு முத்துராஜா வீதி உள்ளிட்ட முக்கிய தெருக்கள் வழியாக வீதி உலா வந்தது.

 அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அம்மனுக்குத் தேங்காய், பழம், மாவிளக்கு வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குட்டிக் குடித்தல் இன்று நடைபெற்றது. மந்தையில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த 1500-க்கும் மேற்ப்பட்ட ஆடுகளை கொண்டு வந்தனர். மருளாளி சரியாக 10;30 மணியளவில் மந்தைக்கு வந்தார். முதலில் இந்து அறநிலையத்துறை சார்பில் அரசு கிடா வழங்கப்பட்டது. பின்னர் முறைப்படி நங்காவரம் பண்ணை ஆடுகள் வழங்கப்பட்டு பொதுமக்கள் ஆடுகள் நேர்த்திக்கடன் கொடுக்கப்பட்டது. மருளாளி வெள்ளி கிண்ணத்தில் ஆட்டின் இரத்தத்தை பிடித்து குடித்து அருள்வாக்கு கூறினார்.இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர். இந்த விழாவிற்க்காக ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர். மேலும் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *