திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சந்தைப்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் அர்ஜூனன் வயது 31 இவரது உடன் பிறந்த சகோதரர் கோபால் வயது 25. சகோதரர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளிகளாக வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று இருவரும் வழக்கம்போல சந்தை பேட்டையில் அடுக்கி வைத்திருந்த சாக்கு பைகளை லாரியில் ஏற்றி உள்ளனர். அப்போது, இவர்கள் எதிர்பாராத விதமாக, சாக்கு மூட்டை பையில் இருந்த 5-1/2 அடி நீள கண்ணாடி விரியன் பாம்பு கோபாலின் கையில் கடித்துள்ளது.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அண்ணன் அர்ஜூனன், பாம்பை விரட்டிச் சென்று அடிக்க முயன்றபோது அவரையும் பாம்பு கடித்துவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த இருவரும் பாம்பை அடித்து லேசான காயத்துடன் உயிரோடு கையில் பிடித்தபடி தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தனர் பாம்பை கையில் பிடித்தபடி அரசு மருத்துவமனைக்கு வந்த இருவரையும் பார்த்த சக நோயாளிகளும் சிகிச்சைபெற வந்தவர்களும் அச்சத்தில் அலறி அடித்து ஓடினர். தற்போது பாம்பு கடிக்கு சிகிச்சை பெற்ற இருவரும் தாராபுரம் அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.