திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இந்த ஊரடங்கு காலத்தில் கள்ளச்சந்தையில் 300-400 வரை அதிக விலைக்கு மது விற்பனை நடைபெறுவதாக அம்மையநாயக்கனூர் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகலட்சுமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் போலீசார் விடியவிடிய கிராமம் கிராமமாக நடத்திய சோதனையில் சிப்காட் மற்றும் பள்ளப்பட்டி பகுதியில் உள்ள தேவர்நகர் பகுதியில் வசித்து வரும் ஆனந்தஜோதி என்பவரது வீட்டில் டாஸ்மாக் கடையில் விற்பனை செய்வது போன்று வீடு முழுவதும் பெட்டி பெட்டியாக சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 126- லிட்டர் அளவுள்ள 1355 மது பாட்டில்களை இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.மேலும் டாஸ்மாக் கடையில் உள்ளது போல அட்டை பெட்டியுடன் பெட்டி பெட்டியாக ஒரே வரிசை எண் கொண்ட பெட்டியாகவும் உள்ளதால் இதில் டாஸ்மாக் பணியாளர்களுக்கும் ஒரு சில காவல் துறையினருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் ஆனந்த ஜோதியை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த ஊரடங்கு நாட்களில் இதுபோன்ற கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்று லாபம் ஈட்ட நினைக்கும் இது போன்ற சமூக விரோதிகள் மீது துணிவுடன் செயல்பட்டு நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளுக்கு இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவிக்கின்றனர்.