திருச்சி மாவட்டம் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் சித்திரைத் தேரோட்ட திருவிழாவின் நிறைவு நாளில் அம்மன் தங்க கமல வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் சமயபுரம் மாரியம்மன் கோயில் மிகவும் பிரசித்திபெற்றது. இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் தேரோட்ட திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான சித்திரைத் தேர் திருவிழா கடந்த 7 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதனைத் தொடர்ந்து அம்மன் தினமும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைப்பெற்றது. முக்கிய நிகழ்வான தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி கடந்த 16 ஆம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது்.

இந்நிலையில் தேர் முடிந்து 8 ஆம் நாள் திருவிழாவும், சித்திரை திருவிழாவின் நிறைவு விழா நேற்று அம்மன் மூலஸ்தானத்திலிருந்து வசந்த மண்டபம் புறப்பட்டு சென்று திருமஞ்சனமும் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து இரவு மாரியம்மன் சிறப்பு மலர் அலங்காரத்துடன், அலங்கரிக்கப்பட்டு தங்க கமல வாகனத்தில் எழுந்தருளி கோயில் உள்பிரகாரம் மற்றும் கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய நான்கு தேரோடும் வீதிகளில் வானவேடிக்கையுடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையரும் செயல் அலுவலருமான கல்யாணி தலைமையில் கோயில் பணியாளர்கள், மற்றும் கோயில் குருக்கள் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *