வருகின்ற 19ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில்பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் தாலுக்கா மணிகண்டம் ஒன்றிய தாயனூர் ஊராட்சி பொதுமக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கோரிக்கை மனு அளிக்க வந்தனர், அப்போது அப்பகுதி மக்கள் கூறுகையில் தாயனூர் கிராமம் 75% விவசாயம் சார்ந்த கிராமம் ஆகும் இந்த ஊராட்சியில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவு உள்ள விவசாய நிலங்கள் கொண்ட ஒரு பகுதியாகும், இந்தப் பகுதியை திருச்சிராப்பள்ளி மாநகராட்சியுடன் இணைக்க இருப்பதாக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு எங்கள் தாயனூர் பஞ்சாயத்து பகுதி மக்களின் உரிமைகளையும் சலுகைகளும் பறித்து கடுமையான வரி விதிப்பு ஏற்படுத்தி வாழ்வாதாரத்தை சீர்குலைத்து நிதிச்சுமையினை ஏற்படுத்தும் என்று நாங்கள் கருதுகிறோம்,

எங்களுக்கு வேறு வாழ்வாதாரம் இல்லாததால் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் விவசாயக் கூலி தொழிலாளர்களாக வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர். இந்நிலையில் தாயனூர் ஊராட்சி பகுதியை மாநகராட்சி பகுதியுடன் இணைத்தால் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் அனைவரின் வேலை வாய்ப்பும் பறிபோகும் கடுமையான வரிச்சுமையினை ஏற்படுத்தி விவசாயத்தையும் விவசாயக் கூலி தொழிலாளர்களையும் வாழ்வாதாரத்தை பாதிக்கும் சூழ்நிலை ஏற்படும், எனவே இது சம்பந்தமாக பலமுறை அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், நாங்கள் தற்போது நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக முடிவு எடுத்துள்ளோம். எங்கள் பகுதியை மாநகராட்சியுடன் இணைக்க மாட்டோம் என்று அறிவிப்பு வந்தால் மட்டுமே நாங்கள் வாக்குச்சாவடிக்கு செல்வோம் இல்லை என்றால் நாங்கள் தேர்தலை புறக்கணிக்க உள்ளோம், என அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *