தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் இன்று முதல் பார்சல் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சென்னை செல்லும் அரசு விரைவு பேருந்தில் பார்சல்கள் அனுப்பப்பட்டது. இதன் மூலம் அரசு விரைவு பேருந்தில் உள்ள சுமைப் பெட்டிகளுக்கு, மாதம் மற்றும் தினசரி வாடகை அடிப்படையில் பார்சல் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தனியார் ஆம்னி பேருந்து மற்றும் லாரியை விட அரசு விரைவு பேருந்துகளில் பார்சல் கட்டணம் குறைவாகவும், அதே நேரத்தில் பார்சல் ஒரேநாளில் சென்றடையும் வகையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை, கோயம்புத்தூர் மற்றும் ஓசூர் நகரங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் அரசு விரைவு பேருந்துகளில் பார்சல் சேவை தொடங்கியுள்ளது. குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து வரும் பார்சலை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் சென்னையில் இருந்து இந்த 7 நகரங்களுக்கும் பார்சல் அனுப்ப முன்பதிவு செய்யப்படுகிறது. மாத வாடகை அடிப்படையில் பொருட்களை அனுப்பும் போது பயனாளர்களுக்கு ஒரு மாதத்திற்கான பாஸ் வழங்கப்படும். பொருட்கள் அனுப்பப்படும் தேதிகளில் அந்த பாஸில் டிக் செய்யப்படும். பயனாளர்கள் அரசு விரைவு போக்குவரத்து கழக கிளை மேலாளரிடம் விண்ணப்பித்து பயனடையலாம். 80 கிலோ வரையிலான பார்சலை திருச்சி மற்றும் ஓசூரிலிருந்து இருந்து சென்னைக்கு அனுப்ப 210 ரூபாயும், மதுரையில் இருந்து சென்னைக்கு அனுப்ப 300 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கோயம்புத்தூரில் இருந்து சென்னைக்கு 330 ரூபாயும், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு பார்சல் அனுப்ப, 390 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதற்கு தனியாக 18 சதவிகிதம் ஜி.எஸ்.டியும் விதிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *