தமிழகத்தில் முழு ஊரடங்கு காரணமாக அரசு மதுபான கடைகள் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் அதிக விலைக்கு கள்ள மார்க்கெட்டில் மது விற்பனை படு ஜோராக நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக வெளிமாநிலங்களில் இருந்து ரயில் மூலமாக மதுபாட்டில்கள் கடத்தி வருவதாக ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து திருச்சி ரயில்வே நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் தெய்வேந்திரன் தலைமையில் பயணிகளில் உடமைகளை தீவிர சோதனை செய்து வந்தனர்.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் இன்று அதிகாலை 3 மணி அளவில் ஏசி கோச்சில் வந்த நபரின் உடமைகளை ஸ்கேன் கருவி மூலம் சோதனை செய்ததில் சூட்கேசில் மறைத்து வைத்துக் கொண்டு வந்த 30 மதுபாட்டில்கள் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் திருச்சி பொன்நகர் காமராஜபுரம் பகுதியை சேர்ந்த வேதகண்ணன் என்பவரின் மகன் தங்கராசு என்பதும் பெங்களூரில் இருந்து ரயில் மூலம் முப்பது மதுபாட்டில்களை சூட்கேசில் மறைத்து கொண்டு வந்தது தெரியவந்தது பறிமுதல் செய்த மதுபாட்டில்களை ரயில்வே இருப்புப்பாதை காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.