திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் உலகநாதபுரத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடக்கும். அதேபோல் இந்த வருடம் 72 -ம் ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 8-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. முன்னதாக முத்து மாரியம்மன் செல்வ விநாயகர் கோவிலில் இருந்து குதிரை வாகனத்தில் முளைப்பாரியுடன் வீதி உலா வந்து பூச்செரரிதல் நடைபெற்றது. நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 8.30 மணிக்கு கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து உற்சவ அம்மன் சிம்ம வாகனத்தில் புறப்பட்டு அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் கல்லுக்குழி மற்றும் என்.எம்.கே காலனி வழியாக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், வான வேடிக்கையுடன் திருவீதி உலா வந்து உலகநாதபுரம் அம்மன் கோவில் சன்னதியை சென்றடையும்.

நாளை மறுநாள் (11-ந் தேதி )காலை 7 மணிக்கு காவிரி ஆறு அய்யாளம்மன் படித்துறை மேல சிந்தாமணியில் இருந்து பால் காவடிகள் மற்றும் அக்னி சட்டிகள் வாணவேடிக்கையுடன் புறப்பட்டு உலகநாதபுரம் வீதிவலம் வந்து அம்மன் சன்னதியை அடையும். இதைத்தொடர்ந்து 11 மணிக்கு அன்னதானம் வழங்கப்படும். 12 மணிக்கு அம்மனுக்கு கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் நடைபெறும். 12 – ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு சங்கிலி ஆண்டவர் கோவிலில் சுத்த பூஜை நடைபெறும். மதியம் 12 மணிக்கு உலகநாதபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் 2000 பேருக்கு மகா அன்னதானம் வழங்கப்படும்.

மதியம் ஒரு மணிக்கு விழி இழந்தோர் இல்லம் மற்றும் ஊனமுற்றோர் பள்ளியில் மதிய உணவு வழங்கப்படுகிறது. தொடர்ந்து மாலை 3 மணிக்கு மாவிளக்கு பூஜை நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு மஞ்சள் நீராட்டுடன் சாமி கரகம் உலகநாதபுரத்தில் வீதி உலா வந்து விழா நிறைவு பெறுகிறது. 13-ந்தேதி (திங்கட்கிழமை) சங்கிலி ஆண்டவர் கோவிலில் கிடாவெட்டு பூஜையை தொடர்ந்து மாலை 7 மணிக்கு முத்து மாரியம்மன் கோவிலில் கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை உலகநாதபுரம் பொதுமக்கள் மற்றும் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் வழிபடுவோர் நலச்சங்கத்தினர் செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *