திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் உள்ளது. பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வெளிநாட்டினர் இங்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சிறப்பு முகாமில் நடத்தப்பட்ட சோதனையில் 155 செல்போன்கள், 3 லேப்டாப், ஸ்மார்ட் வாட்ச் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த செல்போன்களை திரும்ப வழங்க வேண்டும் என்று கடந்த 20 நாட்களாக முகாம் சிறைவாசிகள் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 7-ந்தேதி முகாம் வாசிகள் 13 பேர் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை சாப்பிட்டு திடீரென மயங்கினர். அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்து அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் இலங்கை தமிழர்கள் 23 பேர் முகாம் சுவரின் மீது ஏறி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, நாங்கள் வழக்கு முடிந்து ஓரிரு நாட்களில் சொந்த நாட்டுக்கு திரும்ப இருக்கிறோம். எனவே எங்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை, நாட்டுக்கு செல்லும்போது, எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதுபற்றி தகவல் அறிந்த உதவி கமிஷனர் காமராஜ் அங்கு விரைந்து வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கீழே இறங்கினார்கள். இந்த சம்பவத்தால் அங்கு 1 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *