நெட்வொர்க் வெல்பர் அசோசியேசன் மாநில மாநாடு திருச்சியில் வருகிற 8-ம் தேதி நிறுவன தலைவர் மனோகரன் தலைமையில் நடைபெற உள்ளது .இது குறித்து உயர்நிலைக் குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன் திருச்சியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- நேரடி வர்த்தகத்தை வரைமுறைப் படுத்தும் வகையில் கேரளவை போல் சட்டம் இயற்றி தனி வாரியம் அமைக்கப்பட வேண்டும்.

அதன் மூலம் மக்களை ஏமாற்றும் போலி நிதி நிறுவனங்களிடமிருந்து மக்களை காக்க வேண்டும். நிதி நிறுவனங்களிடம் ஏமாற்றப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்க முன்னாள் நீதிபதி தலைமையில் ஒரு ஆணையம் அமைத்து குறிப்பிட்ட காலத்திற்குள் நிவாரணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். நெட்வொர்க் துறையில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கானோர் பயன்பெறும் வகையில் நல வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் வருகிற 8 – ந் தேதி மாநாடு நடைபெற உள்ளது என தெரிவித்தார்.
