திருச்சி மாவட்டத்திற்கு வருகை தந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் திருச்சியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- எஸ்.ஐ.ஆர் பணிகள் எப்படி நடைபெறுகிறது என்பதை வாக்காளர் பட்டியல் வெளிவரும் வரை பொறுத்து இருந்து பார்ப்போம். அதில் வாக்காளர்கள் யாருடைய பெயராவது திட்டமிட்டு நீக்கப்பட்டு இருந்தால், மீண்டும் விண்ணப்பித்து பட்டியலில் தங்களது பெயர்களை சேர்த்து விடலாம். இந்த ஆண்டு நெல் விளைச்சல் அதிகம். மத்திய அரசு விவசாயிகளின் கஷ்டத்தை உணர்ந்து, 22 சதவிதம் ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல் செய்வதை ஏற்றுக்கொள்ள வேண்டும். விவசாயிகளின் நலன் கருதி ஏற்றுக் கொள்வதுதான் நன்றாக இருக்கும். இது விவசாயிகளின் கோரிக்கை, திமுகவின் கோரிக்கை அல்ல. அதை மத்திய அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்.

மெட்ரோ ரெயில் திட்டம் மதுரைக்கும், கோவைக்கும் வருவதற்கு அனுமதி தராமல் இருப்பது, இந்த விவகாரத்தில் மத்திய அரசாங்கம் காழ்ப்புணர்ச்சியோடு அணுகுவதை போல தெரிகிறது. எடப்பாடி ஆட்சிக்கு வந்தால் இத்திட்டம் நிறைவேற்றப்படும் என சிலர் சிரிப்பாக கூறுவது கண்டனத்துக்குரியது. நம்நாட்டில் 15 நொடிக்கு ஒரு கார் விற்பனையாவதாக செய்திகள் வெளி வருகிறது. எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, இத்திட்டத்தை அனுமதிக்க வேண்டும். அது போக்குவரத்து நெரிசலை குறைக்க உதவியாக இருக்கும். போதைப்பொருள் பழக்கவழக்கத்தால் மாணவர்கள் பாதிக்கப்படுவது, கொலைகள், கொல்லைகள் அதிகரிப்பது தடுக்கப்பட வேண்டும். தமிழ்நாடு அரசாங்கம், காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர், துரிதமாக செயல்பட்டு தடுக்கவில்லை என்றால், அது வரும் தேர்தலில் பிரதிபலிக்கும். எங்கள் கட்சி யாருடன் என்பதை கூட்டணி அமைத்தவுடன் சொல்கிறேன். நாங்கள் யாருடன் கூட்டணி என்பதை கூட்டணி அமைத்த உடன் சொல்வதுதான் நாகரிகமாக இருக்கும்.

பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளோம். அதற்கும் தமிழக தேர்தலுக்கும் தொடர்பு இல்லை. திமுகவினருக்கு தவெக என்றால் ஒரு உறுத்தல் இருக்கிறது என்பதை அவர்களது பேச்சிலிருந்து தெரிந்துக்கொள்ள முடிகிறது. தமிழகத்தில் எது வெற்றி கூட்டணி என்பதை தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் தெரிந்துக் கொள்ளலாம். தமிழகத்தில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை தமிழக மக்கள் தீர்மானிப்பார்கள். லஞ்சம் ஒழிக்கப்பட வேண்டும் என்பது எல்லோருடைய கருத்தும். இந்த முறை அமமுக பங்கேற்கும் கூட்டணி வெற்றி கூட்டணியாக இருக்கும் என்று நம்புகிறேன் என தெரிவித்தார். இந்த பேட்டியின் போது திருச்சி தெற்கு மாவட்ட அமமுக செயலாளர் செந்தில் நாதன், தலைமை நிலைய செயலாளர் ராஜசேகரன், அவைத்தலைவர் சாத்தனூர் ராமலிங்கம், ஆட்சி மன்ற குழு உறுப்பினர் கமரூதின், அண்ணா தொழிற்சங்கம் கேவிடி. கலைச்செல்வ, ன்நிர்வாகிகள் மதியழகன் கல்நாயக் சதீஷ்குமார், தருண், தன்சிங்,உடன் இருந்தார்.
