திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி அண்ணா நகரை சேர்ந்தவர் 44 வயதான ரமேஷ். இவரது மனைவி 35 வயதான சுமித்ரா.இந்த தம்பதியினருக்கு முருகானந்தம் என்ற மகனும் நித்யா என்ற மகளும் உள்ளனர். மகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகிவிட்டது. இவர்களது மகன் முருகானந்தம் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு மனைவியுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

ரமேஷ் சுமித்ரா தம்பதியினர் சுய உதவி குழுக்களிலும், மற்றும் அக்கம் பக்கத்திலும் வட்டிக்கு கடன் வாங்கி உள்ளனர். இதனால் அடிக்கடி மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் தனது மகன் முருகானந்தத்துடன் அடிக்கடி தகராறும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தனது பெற்றோர் வசித்து வந்த வீட்டை காலி செய்யும்படி முருகானந்தம் வற்புறுத்தியுள்ளார். இதனால் கணவன், மனைவி இருவரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்கள்.

 இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் ஆளில்லாத நேரத்தில் அரளி விதையை அரைத்து குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தனர். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் சுமித்ராவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ரமேஷ் தந்தை நடராஜன் கொடுத்த புகாரின் பேரில் கல்லக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். ஒரே நேரத்தில் கணவன் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *