திருச்சியில் பிரசித்தி பெற்ற வயலூர் முருகன் கோவில் உள்ளது. இங்கு முத்துக்குமாரர முருகன் பிரதான தெய்வமாக இருந்தாலும் இதனுடன் சேர்த்து ஆதி நாதர் ஆதி நாயகி பொய்யாக் கணபதி முத்துக்குமாரர் ஆகிய சன்னதிகள் உள்ளன. இந்த சன்னதிகளில் இதுவரை 5 அர்ச்சகர்கள் அர்ச்சனை செய்து வந்தனர். இவர்களில் இரண்டு பேர் இந்து அறநிலையத் துறையால் பணி நிரந்தரம் செய்யப் பட்டவர்கள் ஒருவர் தினக்கூலி அடிப்படையிலும் இருவர் கடந்த 12 வருடங்களாக சம்பளம் ஏதும் வாங்காமல் பணி நிரந்தரமாகும் என்ற கனவில் அர்ச்சகராக இருந்து வந்தனர்.

 தற்போது அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதில் கீழ் பிராமணர் அல்லாத ஜெயபாலன் மற்றும் பிரபு என்ற இருவரை இந்து அறநிலை துறை சார்பில் அர்ச்சகர்கள் இன்று நியமித்து அவர்கள் முருகன் சன்னதி வரை சென்று அர்ச்சனை செய்யலாம் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 இன்று இந்த இருவரும் கோவிலுக்குள் நுழைந்து அர்ச்சனை செய்ய முற்பட்ட போது ஏற்கனவே இருந்த ஆதிசைவ சிவாச்சாரியார்கள் இந்த இருவரும் ஆகம விதிப்படி முறையாக அர்ச்சனை செய்ய மாட்டார்கள் என்றும் , ஏற்கனவே கோவிலில் அர்ச்சனை செய்து வந்த பரம்பரையாக இருக்கும் ஆதிசைவ சிவாச்சாரியார்களை பணி நிரந்தரம் செய்ய கோரி போராட்டம் நடத்தினார்கள்.

இதனை அறிந்த இந்து முன்னணியினர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் வயலூர் கோவிலில் குவிந்தனர். மேலும் பிராமணர் அல்லாத அர்ச்சகர்களுக்கு ஆதரவாக மக்கள் அதிகாரம் அமைப்பினர் மற்றும் சமூகநீதிப் பேரவை மற்றும் கிராம மக்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்தனர்.

இதனை அறிந்த ஜீயபுரம் டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் இந்து அறநிலைத்துறை இணை ஆணையர் செல்வராஜ் உதவி ஆணையர் மோகனசுந்தரம் ஸ்ரீரங்க ஆய்வாளர் வயலூர் செயல்அலுவலர் மற்றும் அருகில் உள்ள கோவில் செயலாளர்கள் ஆகியோர் வந்து இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

பேச்சுவார்த்தையின் முடிவில் அனைவரும் அர்ச்சகராகலாம் என்ற அரசின் விதிப்படி பிராமணர் அல்லாத ஜெயபாலன் மற்றும் பிரபு ஆகிய இருவர் கோவிலுக்கு சென்று முருகன் சன்னதியில் தமிழில் அர்ச்சனை செய்தனர். ஏற்கனவே இருந்த ஆதிசைவ சிவாச்சாரியார்கள் உள்ளே செல்லாமல் கோவில் அலுவலகம் முன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்கள் கலை இலக்கியம், மக்கள் அதிகாரம், சமூக நீதிப் பேரவை மற்றும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியினர் கோவிலுக்கு உள்ளே சென்று முருகன் கருவறையில் இருந்த பிராமணரல்லாத அர்ச்சகர்களை தமிழில் அர்ச்சனை செய்யச் சொல்லி கேட்டு மகிழ்ந்து கைதட்டினர்.

மேலும் திடீரென தமிழ் வாழ்க, தமிழ் கடவுள் முருகன் வாழ்க என்று கோஷம் எழுப்பினர் இதனை கண்ட மற்றொரு தரப்பினர் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா என்ற கோஷத்தை மாறி மாறி எழுப்பியதால் முருகன் கோவில் கருவறை முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்