தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது அதிலும் குறிப்பாக திருச்சியில் தற்போது தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு திருச்சி அரசு தலைமை மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். அதிலும் அரசு தலைமை மருத்துவமனையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விபத்து, அறுவை சிகிச்சை, பிரசவம் என நோயாளிகள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் நோயாளிகளின் அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்பட்ட மருத்துவ உபகரணங்கள், பிளாஸ்டிக் கவர், மருத்துவர்கள், நோயாளிகள் பயன்படுத்திய முககவசம், கையுறைகள் உள்ளிட்ட குப்பை கழிவுகளை தூய்மை பணியாளர்கள் மூலம் உடனடியாக மருத்துவமனை விட்டு அப்புற படுத்தப்படாமல், மருத்துவமனை வளாகத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட தாய்மை நலம் மற்றும் குழந்தைகள் நல கட்டிடம் அருகே கடந்த சில நாட்களாக குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால் தற்போது மலை போல் குவிந்து கிடக்கிறது.

இப்படி இங்கு குப்பை கழிவுகளை கொட்டுவதால் இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அள்ளப் படாத குப்பை கழிவுகளில் இருந்து கொசுகள் மற்றும் புழுக்கள் அதிக அளவில் உற்பத்தி ஆகிறது. இதுமட்டுமின்றி இந்த கழிவுகளை உடனுக்குடன் அகற்றாமல் இரவு நேரங்களில் தீயிட்டு கொளுத்துகின்றனர். இதனால் நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது .

மேலும் இந்த குப்பைக் கழிவுகளில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி அருகே உள்ள குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கும் அவர்களுடன் இருக்கும் உறவினர்களுக்கும் தொற்று நோய்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உள்ளது. ஏற்கனவே கொரோனா, கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, வைரஸ் காய்ச்சல்கள் போன்ற கொடிய நோய்கள் ஏற்பட்டு வரும் சூழ்நிலையில் இப்படி மருத்துவமனையின் அலட்சியத்தால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அவர்களை அழைத்து வரும் உறவினர்களுக்கு நோய் தொற்று அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது .இதை கருத்தில் கொண்டு உடனடியாக இங்கு கொட்டப்படும் மருத்துவ கழிவுகளை அப்புறப்படுத்த மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். என நோயாளிகள், உறவினர்கள், சமுக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *