2012ஆம் ஆண்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 16 ஆயிரத்து 500 பகுதிநேர ஆசிரியர்கள் 5 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர்.

இதில் 4 ஆயிரம் காலியிடங்களால் ஏற்பட்டுள்ளன. தற்போது 12 ஆயிரத்து 500 பகுதிநேர ஆசிரியர்களே உள்ளனர். 2017ஆம் ஆண்டு முதல் இவர்களுக்கு 7 ஆயிரத்து 700 ரூபாயாக சம்பளம் கூட்டி வழங்கப்பட்டு வந்தது.

கடந்த பிப்ரவரியில் பகுதிநேர ஆசிரியர்களின் சம்பளத்தை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழ்நாடு அரசு, இனி அவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாயாக சம்பளம் வழங்க அரசாணை பிறப்பித்தது. இதனால் 12,500 பகுதிநேர ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க மாதம் ஒன்றுக்கு கூடுதலாக 12 கோடி ரூபாய் வரை செலவாகும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இச்செய்தி பகுதிநேர ஆசிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை. ஏனெனில் அவர்கள் சம்பள உயர்வு வேண்டாம். பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதே அவர்களின் நீண்ட நாளைய கோரிக்கை.

அதேபோல காலமுறை ஊதியத்திற்கு மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்வைத்தனர். ஆனால் அப்போதைய அரசு கண்டுகொள்ளவில்லை. தேர்தல் நெருங்கிய சமயம் அதிமுக அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டிலும் இதுதொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. புதிய திமுக அரசிடம் இந்த கோரிக்கையை வலியுறுத்தினர். தற்போது அதற்கு விடிவுகாலம் பிறந்துள்ளது. ஆம் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பகுதிநேர ஆசிரியர்களின் பணி நிரந்தரம் செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *