திருச்சி கேர் கெமிஸ்ட்ரி அகாடமி இயக்குனரும் கல்வியாளருமான முத்தமிழ்செல்வன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்ற ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் முதுகலை ஆசிரியர் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் உயர்நிலை கல்விக்கு பாடம் நடத்திட இளங்கலை ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு மூலமும், மேல்நிலை மாணவர்களுக்கு பாடம் நடத்திய முதுகலை ஆசிரியர் தேர்வு மூலமும் நியமிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் உருவாகும் காலிப்பணியிடங்களுக்கு 50 சதவீத ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வாணையம் மூலமும் 50 சதவீத ஆசிரியர்கள் பணி மூப்பு அடிப்படையிலும் நியமிக்கப்படுகின்றனர். ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றோருக்கு வழங்கப்படும் சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லத்தக்கது என்ற அரசாணையை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் 59 வயதுவரை ஆசிரியர் பணியில் சேர முடியும்.

இந்நிலையில் கடந்த அதிமுக ஆட்சியின் இறுதி கட்டத்தில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதில் பொதுப் பிரிவினருக்கு 40 வயதுக்கு உட்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் இனத்தவருக்கு 45 வயது என்றும் அரசாணை வெளியிடப்பட்டது. இதன் மூலம் இந்த வயதுக்கு உட்பட்டவர்கள் தான் முதுகலை ஆசிரியர் தேர்வு எழுதி பணியில் சேர முடியும் என்று தகுதி நிர்ணயம் செய்யப்பட்டது. 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்த தேர்வு எழுத முடியாத நிலை உருவானது. தற்போது தமிழகத்தில் அமைந்துள்ள புதிய ஆட்சி நல்லதோர் ஆட்சியாக செயல்பட்டு வருகிறது அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள 747 கல்வியியல் கல்லூரிகள், 8 தனியார் பல்கலைக்கழகங்களில் பயின்று ஆண்டுக்கு 90 ஆயிரம் பேர் முதுகலை ஆசிரியர் பயிற்சி முடித்து வெளியேறுகின்றனர். ஆகையால் முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு உள்ள வயது வரம்பை நீக்கி தமிழக அரசு தற்போது நடைபெறும் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே உத்தரவு வெளியிட வேண்டும் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களிடம் கோரிக்கையை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *