முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், பேரறிவாளன் 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைத் தண்டனை பெற்று தற்போது ஜாமீனில் இருந்தார். இந்த சமயத்தில், இந்த வழக்கில் இருந்து தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில், பேரறிவாளனை ஏன் விடுதலை செய்யக்கூடாது? என மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கில் ஆளுநர் முரணாக வகையில் செயல்பட்டு வருகிறார் என்றும் தெரிவித்திருந்தது.

மேலும், இதுதொடர்பாக மத்திய அரசிடம் பல்வேறு அடுக்கடுக்கான கேள்விகளை உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் எழுப்பியிருந்தன. குறிப்பாக, சிறை நன்னடத்தை மற்றும் ஜாமீனில் வெளிவந்த பின்னர் எந்த புகாரும் இல்லை என்பதால் பேரறிவாளன் விடுதலை செய்யப்படலாம் என உச்சநீதிமன்றம் பல்வேறு முக்கிய கருத்துகளையும் தெரிவித்திருந்தது. பேரறிவாளன் விடுதலை மனு மீது கடந்த 11-ஆம் தேதி அனைத்து வாதங்களும் நிறைவுபெற்ற நிலையில், இதன்பின் எழுத்துபூர்வமான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. உச்ச நீதிமன்றம் தனது அதிகாரம் மூலம் விடுவிக்க வேண்டும் என பேரறிவாளன் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, தமிழக அரசு, மத்திய அரசு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தன்னை விடுவிக்க கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, இந்த வழக்கை சிபிஐ விசாரித்ததால் மத்திய அரசுக்கு தமிழக அமைச்சரவை தீர்மானம் பற்றி தெரிவிக்கப்பட்டது. 2017-ஆம்ஆண்டு பிப்ரவரி 19-ல் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது. கடந்த மார்ச் 9-ஆம் தேதி பேரறிவாளன் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அவருக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க அரசியல் சாசனத்தின் 161-வது பிரிவின் கீழ் ஆளுநர் முடிவு எடுக்க நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு கடந்த 2018-ல் தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்த நிலையில், தன்னை விடுவிக்க கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு தற்போது தீர்ப்பை வாசித்தனர். அதில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.30 ஆண்டு கால சட்டப்போராட்டம் இன்று முடிவுக்கு வந்தது. குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *