திருச்சி இரயில்வே ஜங்சன் வளாகத்திற்குள் 100 க்கணக்கான ஆட்டோ ஓட்டுனர்கள் நீண்ட வருடங்களாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்பு சங்கமான ஆட்டோ ஓட்டுனர்கள் பாதுகாப்புச் சங்கம் மற்றும் பிற சங்கத்தினரும் முறையாக ஆட்டோ ஓட்டிவரும் நிலையில் தென்னக இரயில்வே நிர்வாகம் புதிய நடைமுறையாக ஆட்டோ ஓட்டுனர்கள் பணம் கட்டி பாஸ் எடுத்து வண்டி ஓட்ட வலியுறுத்தியுள்ளது. அதை பின்பற்றி ஆட்டோ ஓட்டுனர்கள் பாஸ் எடுத்து சவாரி எடுத்து வரும் நிலையில் தற்போது சில புரோக்கர்களை வைத்துக் கொண்டு கூடுதலாக புதிய புதிய ஆட்டோ ஓட்டுனர்களிடம் பல்லாயிரக்கணக்கில் இலஞ்சம் வாங்கிக் கொண்டு அளவுக்கு அதிகமான பாஸ் வழங்கி வருவதாக தெரிவித்தனர் .

இதனால் ஆட்டோ ஓட்டுனர்கள் மத்தியல் சண்டை சச்சரவுகள் ஏற்படுகிறது. புதிய ஆட்டோ ஓட்டுனர்கள் சவாரி எடுத்து சென்றுவிடுவதால் நீண்ட வருடங்களாக சங்கமாக ஒருங்கிணைந்து ஆட்டோ ஓட்டி வரும் ஓட்டுனர்கள் சவாரி கிடைக்காமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை கண்டித்து விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக ஆட்டோக்களுக்கு கொடுத்த பாஸை ரத்து செய்யக் கோரியும்! சில கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில நாட்களுக்கு முன் தென்னக இரயில்வே மேலாளரிடம் பாதிக்கப்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் மனு கொடுத்தனர்.

தற்போது வரை நடவடிக்கை எடுக்கப்படாததால் இன்று ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம் மற்றும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி சங்கத்தினர் இணைந்து ரயில்வே நிலைய வளாகத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்ட இணைச் செயலாளர் மணலிதாஸ் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட தலைவர் சிவா ஆகியோர் தலைமையில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் ரயில்வே நிலையம் வளாகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *