திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே திருச்செந்துறை கிராமம் முழுவதும் வக்பு வாரியத்திற்கு சொந்தம் என்று சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வக்பு வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதேபோல திருச்சி மாவட்டத்தில் உள்ள செம்பன்குளம், பெரிய நாயக்கசத்திரம், சித்தாநத்தம், கொமக்குடி, மணமேடு, பாகனூர் ஆகிய 6 கிராமங்களும் வக்பு வாரியத்துக்கு சொந்தமான சொத்து எனவும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் தங்களது பெயர்களில் உள்ள சொத்துகளை வாங்கவோ, விற்கவோ முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, திருச்செந்துறை கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து இன்று (14ம் தேதி) காத்திருப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், நேற்று பிற்பகல், 3 மணியளவில் ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் (பொ) வைத்தியநாதன் தலைமையில், திருச்செந்துறை கிராம மக்களுக்கும், வக்பு வாரிய அதிகாரிகளுக்கும் இடையே சமாதான பேச்சு வார்த்தை நடைபெற்றது. இந்த சமாதான பேச்சுவார்த்தையின் முடிவில், திருச்செந்துறை, கடியாக்குறிச்சி ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்கள் இன்று முதல் பத்திரப்பதிவு செய்ய ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, இன்று நடத்தவிருந்த போராட்டத்தை கிராம மக்கள் கைவிட்டனர். இந்நிலையில், திருச்செந்துறை சிவன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்யவந்த பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா, ஊர்மக்களை சந்தித்து கிராமத்தின் இடங்கள் தொடர்பான வக்பு வாரியத்தின் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது பா.ஜ.க வின் மாநில மாவட்ட மற்றும் மண்டல் நிர்வாகிகள், கட்சி அணிபிரிவு நிர்வாகிகள் என 25 க்கும் மேற்பட்டவர்கள் உடனிருந்தனர்.

பின்னர் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்:-

திருச்சி மாவட்டம் திருச்செந்துறை கிராமம் முழுவதும் வக்ஃப் வாரியத்துக்கு சொந்தம் என அந்த வாரியத் தலைவர் அறிவித்திருப்பது சட்ட விரோதம். திருச்செந்துறை, திருவெறும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்துக்களின் பெயரில் உள்ள சொத்துக்களை வக்ஃப் வாரியம் அபகரிக்கப் பார்க்கிறது. வக்ப் இத்தகைய மோசடியில் ஈடுபடும் வக்ஃப் வாரிய முதன்மை நிர்வாக அதிகாரியை(CEO) உடனடியாக கைது செய்ய வேண்டும்.

இந்த விவகாரத்தில் இந்துக்கள் மட்டுமல்லாது இஸ்லாமியர்களும் பாதிப்படைகிறார்கள். தமிழகத்தில் பேய்களின் ஆட்சி நடக்கிறது.இது ஒரு இந்து விரோத அரசு ஸ்டாலின் ஆட்சி மாலிக் கபூரின் ஆட்சியாக உள்ளது. ஸ்ரீரங்கம் கோயில் முன்பு ஆகம வேத நூல்களை எரிப்பதாக ஒரு‌ அமைப்பினர் அறிவித்துள்ளனர். அவர்களை வரலாம் 16-ந் தேதி இரவுக்குள் தமிழக அரசு கைது செய்ய வேண்டும். இந்து மதக் கோவில்களையும், சொத்துக்களையும் அரசுடமையாக்கி இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் தமிழக அரசு வைத்துள்ளது. ஒரு மதச்சார்பற்ற அரசு இஸ்லாமிய, கிறிஸ்துவ மதப் சொத்துக்களையும் கையகப்படுத்தி இந்து என்ற வார்த்தையை தவிர்த்து பொதுவான பெயரில் வாரியத்தின் கீழ் கொண்டு வர வேண்டும். இந்த நிலங்கள் அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்கள் என தகவல் பலகையில் ஒட்டி வைத்திருக்க வேண்டும். ஏன் அப்படி செய்யவில்லை ? என கேள்வி எழுப்பினார்.15 தினங்களுக்குள் சேகர் பாபு இதனை செய்ய வேண்டும். இல்லை என்றால் உணர்வுள்ள இந்துக்கள் ஒன்று கூடி தொடர் போராட்டங்களை முன்னெடுப்பார்கள். என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *