திருச்சி தனியார் மருத்துவமனையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் சேர்த்திருந்த, தலைமைக் காவலரின் மகளுக்கு தரமான மருத்துவ சிசிச்சையுடன் பொருளுதவியும் சத்தமின்றி செய்து, காவலர்களின் மனங்களில் மனிதநேய ஜ ஜி-யாக இடம் பிடித்துள்ளார், மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் பாலகிருஷ்ணன்.

இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

தஞ்சாவூர்மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் வயது (57). அருகில் உள்ள அதிராம்பட்டிணம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். ரவிச்சந்திரன் இந்திராணி தம்பதியருக்கு ஒரு மகள் மற்றும் மகன். மகள் பிரியதர்ஷினி மூத்தவர் கரம்பயம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்பு 2 ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த செப்டெம்பர் 12 ஆம் தேதி 2 ஆம் கட்ட தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரியதர்ஷினிக்கு , வாந்தி, கண் மற்றும் தலைவலி என அதன் பின்னர் உடல் நிலைக் குறைபாடு ஏற்பட்டுள்ளது.பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையிலும் பின்னர் தனியார் மருத்துவமனையிலும் தொடர் சிகிச்சை பெற்றுள்ளனர். தடுப்பூசியால் பிரச்னை ஏதுமில்லை, உணவில் விஷத்தன்மை இருக்கலாம் என்ற சந்தேகத்தில் சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர் பல நாள்கள் சிகிச்சையிலும் குணமாகாத நிலையில், திருச்சி தென்னூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செப். 22 ஆம் தேதி நள்ளிரவு கொண்டு வரப்பட்டு சேர்க்கப்பட்டார். பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பின்னர் அவரது மூளைப் பகுதியில் ரத்தம் உறைந்திருப்பது தெரியவந்துள்ளது. பின்னர் மருந்துகள் மூலம் அடைப்பை கரைக்க முயன்றும் இயலாத நிலையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டால் குணமடைய வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். இதற்கிடையே சேமிப்பிலிருந்த தொகை சுமார் 5 லட்சம் வரையில் செலவாகிவிட்ட நிலையில் மேலும் பணத்துக்கு என்ன செய்வது என விழிபிதுங்கிய நிலையில் இருந்துள்ளார். அப்போது இந்த விவரம் குறித்து மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணனுக்கு தெரியவரவே, அவர் சத்தமின்றி பணம் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் உதவியதுடன், பிரியதர்ஷினி சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்து வீடு திரும்பவும் வழி வகை செய்துள்ளார்.

இது குறித்து ரவிச்சந்திரன் கூறுகையில்…

கையில் பணமும் தீர்ந்து விட்டது, காப்பீட்டு பணமும் எதிர்பார்த்த அளவு கிடைக்காது என மருத்துவமனையில் கையை விரித்து விட்டனர். இந்நிலையில், தகவல் கேட்டு கடவுள் போல ஐ ஜி சார் வந்தார். மருத்துவமனை நிர்வாகத்திடமும் காப்பீட்டு நிறுவனத்திடமும் பேசி மருத்துவ தொகைக்கும் சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்தார். அதன் பின்னரே எனது மகள் குணமடைந்துள்ளார். ஜ ஜி ஒரு அதிகாரி மூலம் இந்த பணிகளை மேற்கொண்டிருக்கலாம். ஆனால் நேரில் வந்து பார்த்து விசாரித்து நடவடிக்கை எடுத்தது மறக்கமுடியாது. எங்கள் குடும்பம் மட்டுமல்ல ஒட்டு மொத்த காவல்துறையினரும் அவருக்கு நன்றி கூறி வருகிறோம் என்றார்.

சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டுகள் :

காவலர் ரவிச்சந்திரன் 1989}90 ஆம் ஆண்டில் காவல் துறையில் பணிக்கு வந்தவர். அந்த பேட்சில் பணிக்குச் சேர்ந்த பலரும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காவல்துறையில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் தங்களுக்கான வாட்சாப் குழுவில் இவை குறித்த விவரங்களை கூறி, ஜ ஜி க்கு பாராட்டு தெரிவித்து, கடவுளுக்கு நிகரான வகையில் புகழ்ந்து வருகின்றனர். அவை குறித்த தகவல்கள் சமூகவலைதளங்களிலும் வைரலாக பரவி வருகின்றது. சாதான காவலரின் குடும்பத்தின் மீது அக்கறை கொண்ட இதுபோன்றதொரு காவல்துறை அதிகாரியை எளிதில் பார்க்க முடியாது என்கின்றனர். 1989}90 பேட்ச் காவலர்கள் குழு மூலம் நண்பர்கள் தொகை திரட்டி ரூ. 50,000 ரொக்கத்தை ரவிச்சந்திரனின் குடும்பத்தினருக்கு வழங்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *