திருச்சியில் உள்ள அகதிகளுக்கான சிறப்பு முகாமில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில் அகதிகள் பயன்படுத்திவந்த 60 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்திற்குள் அகதிகளுக்கான சிறப்பு முகாம் அமைந்துள்ளது. இங்கு இலங்கை தமிழர்கள் 115 நபர்கள் உள்ளிட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய 165 வெளிநாட்டவர்கள் அடைக்கப் பட்டுள்ளனர்.திருச்சியில் மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள இந்த சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள அகதிகள் 11 பேரிடம், கடந்த மாதம் 20 ஆம் தேதி தேசிய புலனாய்வு முகமை (NIA)அதிகாரிகள் 13 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவர்கள் வைத்திருந்த நகைகள், பணம், செல் போன், லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை NIA அதிகாரிகள் பறிமுதல் செய்துவிட்டு சென்றனர். அதற்கு அடுத்த நாள் பொருளாதார குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் 4 பேர் சிறப்பு முகாமில் உள்ள அந்த குறிப்பிட்ட 11 அகதிகளிடம் விசாரணை நடத்தினார்கள்.

அமலாக்க துறையினரின் விசாரணையில், அந்த பொருட்களை வாங்கியதற்கான பணம் எவ்வாறு வந்து சேர்ந்தது? அதற்கு முறையாக சரக்கு மற்றும் சேவை வரி (GST)செலுத்தப்பட்டுள்ளதா? என்கிற விவரங்களை கேட்டறிந்தனர். உரிய ஆவணங்களை சமர்ப்பித்தால் கையகப்படுத்தப்பட்ட பொருள்களை மீண்டும் ஒப்படைப்பதாக உறுதியளித்துவிட்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றுவிட்டனர்.

இந்த நிலையில் இன்று காலை திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள அகதிகளுக்கான சிறப்பு முகாமில் திருச்சி மாநகர போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த முகாமில் இன்று இலங்கை தமிழர்கள் உள்ளிட்ட 165 வெளிநாட்டவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் போதை பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் ஏதேனும் பதுக்கி வைத்துள்ளனரா? என போலீசார் ஆய்வு நடத்தினார்கள். இந்த திடீர் சோதனையில் 150 போலீசார் ஈடுபடுபட்டுள்ளனர். இங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் அனுமதி இல்லாமல் பயன்படுத்தி வந்த 60 செல்போன்களை போலீசார் இதுவரை பறிமுதல் செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *