திருச்சி படைக்கலன் தொழிற்சாலையில் கடற்படைக்கு பயன்படுத்தும் வகையிலான புதிய ரக துப்பாக்கி தயாரிக்கப்பட்டு இந்திய கடற்படையின் மூத்த அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. திருச்சி படைகலன் தொழிற்சாலையில் முப்படைகளுக்கு தேவையான துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக ரிமோட் கண்ட்ரோல் தொழில்நுட்பத்துடன் இயங்கும் வகையில் எஸ்ஆர்சிஜி ரக துப்பாக்கிகள் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. புதிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் எஸ்ஆர்சிஜி துப்பாக்கியானது 12.7எம்.எம் எம்2நோட்டோ வகையைச் சார்ந்ததாகும் .இந்த ரக துப்பாக்கியை இந்திய கடற்படை, கடலோர காவல்படை கப்பல்களில் பயன்படுத்தலாம்.

பகல் மற்றும் இரவு நேரத்தில் இலக்கை துல்லியமாக கண்டறிந்து தாக்கும் சாதனங்களை உள்ளடக்கியது.சிறிய , பெரிய படகுகளில் பொருத்தக்கூடிய இந்த துப்பாக்கியில் தானியங்கியாக இலக்கை தேடும் வசதி மற்றும்எதிர்பாராத மின்தடை, தானியங்கி தொழில்நுட்பத்தில் பழுது ஏற்பட்டால் கூட கைகளால் இயக்கும் வசதி உள்ளது.இந்திய கடற்படை, கடலோர காவல்படைக்காக இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும். இதனால் தளவாடங்கள் கொள்முதல் செலவு தொகை சேமிக்கப்படும்.
இஸ்ரேல் நாட்டின் எல்பிட் சிஸ்டம் என்ற நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் இந்த துப்பாக்கி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.இதை பரிசோதிப்பதற்கான வசதிகளும் திருச்சி படைகளின் தொழிற்சாலையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன .பரிசோதனை வெற்றிகரமாக முடிந்தவுடன் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படைக்கு துப்பாக்கிகளை வழங்க முடிவு செய்யப்பட்டது.அதன்படி இன்று 12.7எம்எம் எஸ்ஆர்ஜிசி ரக துப்பாக்கிகள் ஒப்படைப்பு நிகழ்வு இன்று நடைபெற்றது.அப்போது தொழிற்சாலை வாரிய தலைவர் விஸ்வகர்மா தலைமையில் இந்திய கடற்படை மூத்த அதிகாரி ஐயர் வசம் துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தொழிற்சாலை பொது மேலாளர் சஞ்சய் திவிவேதி மற்றும் தொழிற்சாலை அதிகாரிகள் செய்தனர்.இந்த துப்பாக்கியானது பயன்பாட்டுக்கு வந்தால் நமது நாட்டின் கடல்வழி பாதுகாப்பு மேலும் பலப்படும் என்கிறார்கள் தொழிற்சாலை அதிகாரிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *