திருச்சி மத்திய மண்டல தீயணைப்பு மீட்பு படை அலுவலகம் ஒருங்கிணைந்த கோர்ட் அருகாமையில் அமைந்துள்ளது. இங்கு ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் வசதி உள்ளது. இந்த மண்டலத்துக்கு உட்பட்ட தீயணைப்பு நிலையங்களில் ஆக்சிஜன் சிலிண்டர் தீர்ந்து விட்டால் காலி சிலிண்டர்களை கொண்டு வந்து இங்கு நிரப்பிச் செல்வார்கள். வழக்கம்போல் இன்று காலை 10 மணி அளவில் நிலைய அலுவலர் சரவணன் முன்னிலையில் திருச்சி லால்குடி அன்பில் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் (வயது 27) என்ற தீயணைப்பு படை வீரர் காலி சிலிண்டர்களில் ஆக்ஸிஜன் நிரப்பி கொண்டு இருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக அந்த சிலிண்டர் டமார் என்ற சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் அந்த தீயணைப்பு வீரரின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணனும் காயம் அடைந்தனர் அவர்களை உடனடியாக சக தீயணைப்பு படை வீரர்கள் அவரை மீட்டு அருகாமையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த சிலிண்டர் வெடிப்பு சத்தம் அருகாமையில் உள்ள கோர்ட் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பலரும் வெடிகுண்டு வெடித்திருக்கலாம் என கருதி ஓட்டம் பிடித்தனர்.விபத்து தொடர்பாக செசன்ஸ் கோர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *