நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(வயது 56). அ.தி.மு.க.வை சேர்ந்த இவர் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை நீலகிரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக இருந்தார்.மேலும் குன்னூர் நகர்மன்ற தலைவராக பதவி வகித்து உள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தீபாவளி நாளில் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் குடிபோதையில் இரவு 10 மணியளவில் ஓட்டுப்பட்டறை அருகே முத்தாளம்மன் பேட்டை குடியிருப்பு பகுதியில் உள்ள கோபி (47) என்பவரது வீட்டுக்குள் ஆடையின்றி நிர்வாண கோலத்தில் திடீரென புகுந்தார்.

அப்போது வீட்டில் பெண்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரிடம், கோபி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அவரை கோபி தாக்கியதாக தெரிகிறது. இதனால் காயமடைந்ததாக கூறி குன்னூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கோபாலகிருஷ்ணன் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

இதையடுத்து முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் தனது வீட்டிற்குள் நிர்வாணமாக நுழைந்தது குறித்து குன்னூர் நகர போலீஸ் நிலையத்தில் கோபி புகார் அளித்தார். மேலும் தன்னை தாக்கியதாக கோபி மீது கோபாலகிருஷ்ணன் புகார் கொடுத்தார். இதனால் அவர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் நிர்வாணமாக அடுத்தவர் வீட்டுக்குள் புகுந்த காட்சி செல்போனில் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் குன்னூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கோபாலகிருஷ்ணன் தன்னை தாக்கியதாக கொடுத்த புகாரின் பேரில் பெண்ணின் கணவர் கோபி கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக குன்னூர் காவல்துறையினர் முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணனை கைது செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *