திருச்சி பிஷப் ஹீபர் மேல் நிலைப்பள்ளியில் சர்வதேச குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களுக்கான குழந்தைகள் பாதுகாப்பு பயிற்சிப் பணி மனையினை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார் – இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாநில திட்ட இயக்குனர், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பணிமனையை தொடங்கி வைத்து பேசிய அமைச்சர்…

பாலியல் துன்புறுத்தல் தொடர்பான விழிப்புணர்வு மாணவர்களுக்கு ஏற்படுத்தப்படும். பள்ளிகளில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்படும். பலருக்கும் விழிப்புணர்வு இல்லை.கிராமப்புற மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது நம் பொறுப்பு. பள்ளிகளில் இதுபோன்று பிள்ளைகள் பாதிக்கப்பட்டதாக சொன்னால் பெற்றோர்களும், ஆசிரியர்களும் செவி கொடுத்து கேளுங்கள் என்றார். பள்ளிக்கு வருகின்ற குழந்தைகள் பாதுகாப்பை உணரும் வகையில் ஆசிரியர்கள் மாணவர்கள் உறவு இருக்க வேண்டும் என்றார்.

இதில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி :

திருச்சியில் ஆரம்பித்துள்ள இந்த விழிப்புணர்வு பயிற்சி பட்டறையை மற்ற மாவட்டங்களுக்கும் எடுத்து செல்ல உள்ளோம் – ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என தனித்தனியே பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. பள்ளி மாணவர்கள் தங்களின் புகார்களை தெரிவிக்க அறிவிக்கப்பட்டுள்ள உதவி எண் 14417 வரும் காலங்களில் பாடப்புத்தகத்தின் முதல் பக்கத்தில் அச்சடிக்க திட்டமிட்டுள்ளோம். மாணவர்கள் இந்த எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்க ஒருங்கிணைந்த புகார் மையம் செயல்படுகிறது. இதில் வரும் புகார்களை விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்போம்.

பள்ளிகளில் மாணவர்களுக்கு பிரச்சனை என்றால் அதன் மீது நடவடிக்கை எடுக்கும் போது பள்ளிக்கு அவப்பெயர் ஏற்படுகிறது என்பதால் பல பள்ளிகளில் பிரச்சினைகளை விசாரிக்காமல் விட்டு விடுகின்றனர் – அது போன்று பள்ளி நிர்வாகம் இருக்க கூடாது, கண்டிப்பாக மாணவர்களின் நலன் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவை பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் கூட பள்ளி நிர்வாகம் குறைந்தபட்சம் அவர்களது பெற்றோர்களையாவது அழைத்து பேசி இருக்கலாம் – பள்ளிகளில் பிரச்சினை ஏற்படும் போது பள்ளி நிர்வாகம் மூடி மறைக்க முயற்சி செய்ய கூடாது.

மாணவர்கள் தரப்பில் இருந்து புகார்கள் வந்துள்ளது – ஆனால் அதே நேரம் காழ்புனர்ச்ச்சி காரணமாக யாரும் தண்டிக்கப்பட்டு விடக்காது,எனவே உண்மை தன்மை ஆராய்ந்து அதன்படி நடவடிக்கை எடுப்போம்.

குழந்தைகள் மீது பாலியல் சீண்டல்கள் இருக்கும் பட்சத்தில் போக்சோ மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மிக கடுமையான நடவடிக்கைகள் இருக்கும்.

தனியார் பள்ளிகள் பெற்றார்களிடம் வற்புறுத்தி முழுப்பணத்தை வாங்குவதாக புகார்கள் வருகிறது – கண்டிப்பாக இதுபோன்ற புகார்கள் இருக்கும் போது அதன் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப்போம், தனியார் பள்ளிகள் கட்டணம் கட்டுவதற்கு கட்டாயப்படுத்தக்கூடாது என்று நீதிமன்றமே கூறி உள்ளது.

புதிய வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பை வரவேற்கிறோம் என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *