தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க திருச்சி ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகாமையில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் 1-1-2022 முதல் 3 சதவீத அகவிலைப்படி உயர்வினை ரொக்கமாக வழங்கிட வேண்டும். தி.மு.க.வின் தேர்தல் கால வாக்குறுதி படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். முடக்கி வைக்கப்பட்டுள்ள ஒப்படைப்பு விடுப்பு ஊதியத்தை மீண்டும் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன், தெற்கு மாவட்ட தலைவர் துரை ஆகியோர் தலைமை தாங்கினர். முன்னதாக வடக்கு மாவட்ட பொருளாளர் துரைசாமி வரவேற்றார். மாவட்டச் செயலாளர்கள் தங்கவேலு, மணி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் வணிகர் வரி பணியாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் எஸ். ஜெயராஜேஸ்வரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

மேலும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜ் பாபு, பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்க மாநில துணைப் பொதுச் செயலாளர் மோகன், பெரியசாமி, மலர்கொடி மாணிக்க விநாயகம் உள்ளிட்ட சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *