கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், வண்டன்மேடு பகுதியை சேர்ந்தவர் சுனில் வர்கீஸ் வயது 38 இவரது மனைவி சவுமியா வயது 33 இவர் வண்டன்மேடு பஞ்சாயத்து கவுன்சிலராக உள்ளார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த வெளிநாட்டில் வேலை செய்து வரும் வினோத் வயது 43 என்பவருடன் சவுமியாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனால் வினோத், துபாயிலிருந்து அடிக்கடி ஊருக்கு வந்து சவுமியாவை சந்தித்து வந்தார். மேலும் இருவரும் திருமணம் செய்து கொள்ள தீர்மானித்தனர். இந்த திருமணத்திற்கு கணவர் சுனில் வர்கீஸ் தடையாக இருப்பார் என்பதால் அவரைக் கொல்ல முடிவு செய்தனர். ஆனால் போலீசில் சிக்கி விடுவோம் என பயந்து அந்த திட்டத்தை கைவிட்டனர். இதன் பிறகு கணவர் சுனிலை போதைப்பொருள் வழக்கில் சிக்க வைக்கலாம் என இருவரும் தீர்மானித்தனர். இதையடுத்து வினோத், தன்னுடைய நண்பரான ஷாநவாஸ் வயது 39 என்பவரை தொடர்பு கொண்டு விவரத்தை கூறினார். அவர், கொச்சியில் உள்ள ஒரு போதைப் பொருள் கும்பலிடம் 45,000 ரூபாய்க்கு எம்.டி. எம்.ஏ என்ற போதைப் பொருளை வாங்கி வினோத்திடம் கொடுத்துள்ளார். வினோத் அதை கொல்லத்தைச் சேர்ந்த ஷெபின்ஷா வயது 24 மூலம் சவுமியாவுக்கு கொடுத்து அனுப்பியுள்ளார். பின்னர் சவுமியா அந்த போதைப் பொருளை தனது கணவனின் பைக்கில் மறைத்து வைத்து விட்டு வினோத்துக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து, கடந்த சில தினங்களுக்கு முன் வினோத் தன்னுடைய நண்பர் மூலம், சுனில் பைக்கில் போதைப் பொருள் கடத்துவதாக இடுக்கி மாவட்ட எஸ்.பி.க்கு ரகசிய தகவல் கொடுத்துள்ளார். இது குறித்து உடனடியாக விசாரணை நடத்தும்படி எஸ்.பி கருப்பசாமி வண்டன் மேடு போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து வண்டன் மேடு போலீசார் சுனிலின் பைக்கை சோதனையிட்ட போது போதைப் பொருள் சிக்கியது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். ஆனால், விசாரணையில் கணவர் சுனில் நிரபராதி என தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் விடுவித்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், கவுன்சிலர் சவுமியா மற்றும் அவரது கள்ளக்காதலன் வினோத் ஆகியோர் சேர்ந்து நடத்திய திட்டம் என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சவுமியாவையும் அவருக்கு உடந்தையாக இருந்த ஷாநாவாஸ் கொல்லத்தைச் சேர்ந்த ஷெபின்ஷா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும், துபாயில் உள்ள வினோத்தை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கள்ளக்காதலனை திருமணம் செய்வதற்காக கணவனை போதைப் பொருள் கடத்தல் வழக்கில் பெண் கவுன்சிலர் சிக்க வைத்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *