யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாநில தலைவர் ரபீக் தலைமையில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் இன்று காலை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் கார்த்திகேயனிடம் புகார் மனு அளித்தனர்.

அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கடந்த மாதம் நடந்த ரம்ஜான் பெருநாள் சிறப்பு தொழுகையை திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடத்த அனுமதி வேண்டி கடந்த ஜனவரி மாதம் 28ஆம் தேதி திருச்சி தில்லைநகர் காவல் நிலையத்தில் மாநில செயலாளர் அப்பாஸ் அலி மனு கொடுத்தார். இந்நிலையில் நாங்கள் தொழுகை நடத்த கேட்டிருந்த அதே பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் குலாம் தஸ்தகீர் கடந்த ஜனவரி 01-ம் தேதி நடத்துவதற்கு அனுமதி வேண்டி காவல்நிலையத்தில் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தில்லை நகர் காவல் நிலையத்தில் இருந்து நாங்கள் கொடுத்த மனுவிற்கு ஏப்ரல் 9ஆம் தேதி தொழுகை நடத்த அனுமதி அளித்து தடையில்லாச் சான்று வழங்கினார்கள். இதேபோல் அவர்களுக்கு ஏப்ரல் 10-ஆம் தேதி அன்று தடையில்லாச் சான்று வழங்கியுள்ளனர். இதனை தொடர்ந்து இரு அமைப்பிற்கும் ஒரே பகுதியில் தொழுகை நடத்த அனுமதி வழங்கியதால் இதுதொடர்பாக தில்லை நகர் சரக காவல் உதவி ஆணையர் தலைமையில் பேச்சு வார்த்தை நடந்தது. இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கு ஏற்கனவே அனுமதி அளித்ததாக கூறி எங்களது தடையில்லாச் சான்று அனுமதியை ரத்து செய்தனர்.

இந்நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருச்சி மாவட்ட தலைவரின் முகநூல் பக்கத்தில் ரம்ஜான் தொழுகை நடத்த முதலில் அனுமதி வழங்கப்பட்டது யாருக்கு? என்ற தலைப்பு போட்டு காவல்துறையினர் வழங்கிய தடையில்லாச் சான்று பெறுவதில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் சூழ்ச்சி செய்ததாக தெரிவித்து அவர்கள் அனுமதி கோரி கொடுத்த கடிதத்தின் நகலையும், தில்லைநகர் ஆய்வாளர் கொடுத்த தடையில்லாச் சான்று அனுமதி நகலையும் இணைத்து ஒரு பதிவு போட்டிருந்தனர். போட்ட அந்த பதிவில் தில்லை நகர் காவல் நிலைய ஆய்வாளர் அவர்கள் கொடுத்திருந்த தடையில்லா சான்று அனுமதி நகலில் ஆய்வாளர் கையெழுத்தின் கீழ் ஆய்வாளரால் எழுதப்பட்டிருந்த 10-04-2022 என்ற தேதியை 06-04-2022 இன்று திருத்தம் செய்து முகநூலில் பிரசுரம் செய்திருந்தனர். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நான் இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தில்லை நகர் காவல் ஆய்வாளர் வழங்கிய தடையில்லா சான்றின் நகலை பெற்றுக் கொண்டேன். மேலும் அரசு ஆவனத்தை பொதுமக்களை ஏமாற்றி குழப்பம் விளைவித்து ஒரு சமூகத்தினர் இடையே பிளவை ஏற்படுத்தும் நோக்கத்தோடு அரசு அதிகாரியின் கையெழுத்து திருத்தம் செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருச்சி மாவட்ட தலைவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயனிடம் புகார் மனு கொடுத்துள்ளோம் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *