திருச்சி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு போட்டியிடும் திமுகவினருக்கான விருப்ப மனு வழங்கும் நிகழ்வை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி திமுக தெற்கு மாவட்ட அலுவலகத்தில் துவங்கி வைத்தார்.இந்நிகழ்வில் கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ் மலைக்கோட்டை பகுதி செயலாளர் மதிவாணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி.

பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான புகார்களை மாணவிகளும் பெற்றோர்களும் தெரிவிக்கும் முறையை எளிதாக்க திட்டமிட்டுள்ளோம். ஒவ்வொரு பள்ளியின் புகார் பலகையிலும் 14417, 1098 இடம் இருக்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல் அங்கு அருகில் உள்ள காவல் நிலையத்தின் தொலைபேசி எண்ணையும் பதிவிட வேண்டும் என சொல்லி இருக்கிறோம். வெறும் புகார் எண் மட்டும் கொடுத்தால் போதாது, எல்லா இடத்திலும் உளவியல் ரீதியாக ஆலோசனைகள் தேவைப்படுகிறது. இதற்கென மாவட்டந்தோறும்

உளவியல் ஆலோசனை வழங்க ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டு சுழற்சி முறையில் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஆலோசனை வழங்க நேற்று சென்னையில் நடைபெற்ற மாவட்ட கல்வி அலுவலர்களுடனான கூட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவித்தார். மேலும், அவர் கூறுகையில் 14417 புகார் மையம் எப்படி செயல்படுகிறது என்பது குறித்து நாளை சென்னையில் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளேன்.

மாணவர்கள் பாதிக்கக் கூடாது என்பது தான் அரசின் விருப்பம். பாதிக்கப்பட்ட மாணவர்கள், மாணவிகள் யாராக இருந்தாலும் தயங்காமல் புகார் எண்ணை தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்து புகார் தெரிவிக்கலாம். அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. 66 லட்சம் என்று இருந்த அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை தற்போது 71லட்சத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது. எந்தெந்த அரசு பள்ளிகளில் உட்கட்டமைப்பு அதிகம் தேவைப்படுகிறதோ அதை செய்து கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். வருகின்ற மாணவர்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டியது அரசாங்கத்தின் விருப்பம். தனியார் பள்ளிகளில் மாணவர்களை முழு கட்டணம் செலுத்த வற்புறுத்தக் கூடாது அவ்வாறு வற்புறுத்தினால் புகார் தெரிவிக்கலாம் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *