திருச்சி பாலக்கரை, கீழப்புதூர்ரோடு, கீழ கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த கூலித் தொழிலாளி மகாலிங்கம் வயது 73 இவரது மனைவி நாகம்மாள் வயது 68 இருவருக்கும் திருமணமாகி 50 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு 3 மகன்கள், 3 மகள்கள் என பேரன் பேத்திகளுடன் அனைவரும் அதே பகுதியில் குடும்பத்துடன் அருகருகேதான் வசித்து வருகின்றனர். மகாலிங்கம் நீண்ட காலமாக கூலித்தொழில் செய்துதான் மனைவி, பிள்ளைகள் எனக் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். வயதாகி உடல் நிலை சரியில்லாமல் போகவே, கடந்த சில வருடங்களாகவே வீட்டிலேயே முடங்கினார். மகாலிங்கத்திற்கு துணையாகவே நாகம்மாள் தன் உடல்நிலை சரியில்லாத போதும் அருகிலேயே இருந்து பணிவிடைகள் செய்து வந்துள்ளார். இருவரும் ஒருவருக்கொருவர் ஆறுதலாகவும் அன்போடும் வாழ்ந்து வந்தனர். இந்தநிலையில்தான் உடல்நிலை சரியில்லாமல் இருந்த மகாலிங்கம் திடீரென நேற்று காலை இறந்துவிட்டார். குடும்பத்தினர் அனைவரும் மகாலிங்கத்தின் இறுதிச்சடங்கு ஏற்பாடுகளை செய்து வந்தனர். அப்போது, கணவர் இறந்த துக்கத்திலேயே இருந்த நாகம்மாள் திடீரென நேற்று மதியம் உயிரிழந்தார். பல ஆண்டுகள் இணைபிரியாமல் வாழ்ந்து வந்த தம்பதி இறப்பிலும் இணைபிரியாமல் இறந்துள்ளனர் என்று கூறி ஊர் மக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *