என்னை மிரட்டி வன்புணர்ச்சி செய்து, என்னையும், எங்களுக்கு பிறந்த குழந்தையையும் கொலை செய்து விடுவதாக மிரட்டிவரும், எனது அக்காள் கணவர் சையது முகமது அப்பாஸ் என்பவரையும், அவருக்கு உடந்தையாக இருப்பவர்களையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, சையத் அலி பாத்திமா என்ற பெண்மணி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கை குழந்தையுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

திருச்சி காந்தி சந்தை அடுத்த தனரத்தினம் நகரை சேர்ந்தவர் சையத் அலி பாத்திமா. இவரது அக்காள் நிபத் என்பவர் தனது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என கூறி அழைத்ததின் பேரில், பாத்திமா தனது அக்காள் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அக்காவுக்கும், அக்காள் குழந்தைக்கும் உதவியாக இருந்துள்ளார்.அந்த வீட்டில் தங்கி உதவியாக இருந்த பாத்திமாவை, அவருக்கு தெரியாமல், அக்காள் கணவர் சையது முகமது அப்பாஸ், தனது செல்போனில் ஆபாச படம் எடுத்துள்ளார். ஒருநாள், தனது மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில், அந்த புகைப்படங்களை பாத்திமாவிற்கு அனுப்பிவைத்து, தனது வீட்டிற்கு வரும்படி பாத்திமாவை அப்பாஸ் அழைத்துள்ளார்.

அதன்பேரில் வீட்டிற்கு வந்த பாத்திமாவை மிரட்டி வன்புணர்ச்சியும் செய்துள்ளார். தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுவந்த நிலையில், இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்றும் பிறந்துள்ளது.”எனது அக்காள் கணவருக்கு பயங்கரவாத அமைப்புகளோடு நெருங்கிய தொடர்பு இருப்பதாக தெரிகிறது. அவர் என்னையும், எங்களது மகனையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டி வருகிறார். எனக்கு பயமாக இருக்கிறது. இதுகுறித்து திருச்சி கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும், அங்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு பாதுகாப்பு கொடுப்பார் என்ற நம்பிக்கையில் வந்து இருக்கிறேன்.” என கூறி, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் கை குழந்தையுடன் பாத்திமா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *