திருச்சி மாவட்டம் சமயபுரம் இந்திரா நகர் காமராஜர் தெருவை சேர்ந்தவர் மஞ்சு பிரியா (28). பெற்றோரை இழந்த மஞ்சூரியா இந்திரா நகரில் உள்ள அவரது பாட்டி வீட்டில் வசித்து வந்தார். இவருக்கும் திருச்சி மலைக்கோட்டை பகுதியை சேர்ந்த சங்கர் பாபு (50) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சங்கர் பாபு திருச்சி மாநகரில் பை தைக்கும் வேலை செய்து வருகிறார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார்.

சங்கர் பாபுவுக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகியுள்ளது. அதனால் மஞ்சு பிரியாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்தநிலையில் மஞ்சு பிரியா தற்போது எட்டு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து மஞ்சு பிரியா பாட்டி வீட்டில் இருந்துள்ளார். மிகுந்த மன உளைச்சலில் இருந்த மஞ்சு பிரியா வீட்டில் யாரும் இல்லாதபோது கடந்த 4ஆம் தேதி தற்கொலை செய்ய முயற்சித்து தூக்கில் தொங்கி உள்ளார்.

அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மஞ்சு பிரியாவை மீட்டு சிகிச்சைக்காக மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் உயிரிழந்தது. இது குறித்து அவரது சகோதரர் சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சமயபுரம் போலீசார் சம்பவத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் மஞ்சு பிரியா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் விசாரணை செய்து வருகின்றனர். திருமணமாகி ஐந்து ஆண்டுகளே ஆன நிலையில் இச்சம்பவம் குறித்து திருச்சி வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்