2012ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி அமைச்சர் கே.என்.நேருவின் . தம்பியும், தொழிலதிபருமான ராமஜெயம் கடத்தி கொலை செய்யப்பட்டார். திருவளர்ச்சோலை பகுதியில் உடலை கைப்பற்றிய போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 12க்கும் மேற்பட்ட தனிப்படைகள், பின்னர் சிபிசிஐடி என வழக்கு மாற்றப்பட்டு போலீசார் விசாரணை நடத்தினாலும், வழக்கில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனை தொடர்ந்து வழக்கானது சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் உறவினர்கள் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்த அடிப்படையில் வழக்கு விசாரணைக்கு சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. எஸ் பி ஜெயக்குமார் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய் குழுவினர் கொலை வழக்கு விசாரணை தொடர்பாக 13 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த திருச்சி நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டது.

திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 6 நீதிபதி சிவக்குமார் முன்பு கடந்த 14ம் தேதி சத்யராஜ், லெட்சுமி நாரயணன், சாமி ரவி, ராஜ்குமார், சிவா (எ) குணசேகரன், சுரேந்தர், கலைவாணன், மாரிமுத்து ஆகிய 8 பேர் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புக்கொண்டனர். தென்கோவன் (எ) சண்முகம் சம்மதம் தெரிவிக்கவில்லை. மோகன் ராம், நரைமுடி கணேசன், தினேஷ், செந்தில் ஆகிய 4 பேர் நேரில் ஆஜராகாத நிலையில் அவர்களை இன்று நடைபெறும் விசாரணையின் போது நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். அதன்படி 4 பேரும் இன்று நீதிபதி முன்பு ஆஜர் ஆனார்கள். விசாரணையில் அவர்கள் 4 பேரும் உண்மை கண்டறியும் சோதனைக்கு, நிபந்தனையுடன் ஒப்புக் கொள்வதாக, அவர்களின் வழக்கறிஞர்கள் சம்மத மனுக்களை தாக்கல் செய்தனர். இதைத்தொடர்ந்து உண்மை கண்டறியும் சோதனை தொடர்பான முடிவினை வருகிற 21ஆம் தேதி தெரிவிப்பதாக நீதிபதி சிவகுமார் கூறினார். இதை அடுத்து வழக்கு வருகிற 21 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் நீதிமன்றத்தில் ஆஜராகும் 12 பேரும் மருத்துவ பரிசோதனை அறிக்கையுடன் ஆஜராக வேண்டும் என நீதிபதி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்